Showing posts with label சூதாட்டம். Show all posts
Showing posts with label சூதாட்டம். Show all posts

Sunday, February 18, 2007

மறக்க முடியாத சூதாட்டம்

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் நாட்களில் என்று நியாபகம் சில பொருட்கள் வாங்கி தர சொல்லி எங்க வீட்டில் கும்பகோணம் போய் வாங்கி வர சொன்னார்கள்.எனக்கு ஒரே குஷி முதல் காரணம் ஸ்கூலுக்கு கட் அடித்து விடலாம். அடுத்து ரஜினி நடித்து சக்கை போடு கொண்டிருந்த ப்ரியா திரைப்படத்தை பார்த்து விடலாம் என்பதுதான்.

என்றைக்குமே அதிகாலையில் எழாத நான் சுறுசுறுப்பாக எழுந்து குழித்து 6.45க்கே சோழன் போக்குவரத்திற்காக காத்து கொண்டிருந்த வேலையில் எதிரில் கண்ட நண்பர்களிடம் ஸ்கூல் விடுப்பு கடிதத்தை கொடுத்து விட்டு சினிமா கதையை வந்து சொல்றேன்டா என்று புறப்பட்டேன் (அன்றைய தினத்தில் யார் முதலில் சினிமா பார்த்தாலும் அதை மறுநாள் திரைவசனத்தோடு ஆக்சன் கலந்து சொல்வார்கள்)

சரி விசயத்திற்கு வருகிறேன் குடந்தை சென்றடைந்து தேவையான பொருட்களை மஞ்சள் பையில் (carry bag) நிரப்பி கொண்டு போடி நடையாக செல்வம் தியேட்டரை நோக்கி நடந்தேன். மேட்னி ஷோவிற்கு நிறைய நேரம் இருந்ததால் மதிய உணவை முடித்து கொண்டேன்.இன்னும் நேரம் மிச்சமிருந்தாலும் செய்வதற்கு ஒன்றுமில்லை ஆகையால் தியேட்டர் வாசலில் போஸ்டரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த எனக்கு 5 வைத்தால் பத்து,10 வைத்தால் இருபது என்று....... காதில் விழந்தது.(மூன்று சீட்டு நடந்து கொண்டிருந்தது அதை நான் பார்த்தது விளையாடியது அதுவே முதல் தரமும் கடைசி தரமும்.) அதை வேடிக்கை பார்க்க அல்லது விளையாட ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தது.அதை எட்டி பார்த்த நான் விளையாடுபவர்கள் டபுள் டபுளாக பணம் எடுப்பதை பார்த்து
சற்றும் சிந்திக்காமல் என்னிடம் உள்ள அனைத்து ரூபாயையிம் கட்டி விட்டு சில வினாடிகளில் எல்லாவற்றையும் இழந்தேன்.

சற்று நேரத்தில் நடந்தேறிய அந்த நிகழ்ச்சியால் என்னிடம் ஒன்றும் இல்லை என்று ஆகிவிட்டது எனது கால்கள் என்னையும் அறியாமல்பஸ் ஸடாப்பை நோக்கி நடந்தது சிந்தனை எல்லாம் பஸ்ஸிற்க்கு பணம் இல்லையே,விட்டில் மீதி பணத்திற்கு கணக்கு கேட்பார்களே என்ன செய்வது என்று குழம்பிய வண்ணமாக பஸ் ஸ்டாப்பை அடைந்த எனக்கு அது வரை வராத அழுகை பீறிட்டு வந்து விட்டது.நான் அழுவதை கண்ட புது மண தம்பதியரில் கணவர் எனது அருகில் வந்து விசாரிக்கிறார் நான் விசும்பி விசும்பி அழவதால் அவரால் நான் சொல்வதை விளங்கி கொள்ள முடியவில்லை இதற்கிடையில் அவரது மனைவி நமக்கேன் வம்பு என்று அவரை அழைத்து கொண்டு அந்த இடத்தை விட்டு சற்று நகர்ந்தார் மீண்டும் கணவர் என்னிடம் வர முயற்ச்சிக்க அவரது இளம் மனைவி கணவரது கையை பிடித்து கொண்டார்.அந்த பசுமையான நினைவுகள் எனது நெஞ்சை விட்டு அகலாது.

இந்த தருணத்தில் அங்கு வந்த முறுக்கு,கடலை மிட்டாய் விற்கும் பையன் விசாரிக்கிறான் என்னை விட இளயவனாக தெரிந்தான்.நான் யோசித்து வைத்து இருந்தபடி அவனிடம் பணம் தொலைந்து விட்டது என்றேன்(உண்மை பேசி இருந்தால் பின் விளைவு எப்படி இருந்திருக்கும் என தெரியல?) அவனுக்கு என் மேல் நம்பிக்கை வரல என்னிடம் உள்ள பொருட்களை வெளியில் எடுக்கும் படி சொன்னான் பார்த்து திருப்தி அடைந்ததும் சட்டை பையில் சில பேப்பர் இருந்தது அதையிம் வெளியில் எடுக்க சொல்லி பார்த்து விட்டு சக நணபர்களை விசில் மூலம் அவர்களை விழித்து விசயத்தை சொன்னான்.

உடனே அவர்கள் வசூல் களத்தில் இறங்கினார்கள்.எனக்காக முகம் தெரியாத நல் உள்ளங்கள் கொடுத்ததை என்னிடம் தந்தார்கள் அந்த தொகை எனது பஸ் கட்டணத்தை விட 2 மடங்கு அதிகமாக இருந்தது. நான் பஸ் கட்டணத்தை போக மீதியை அவர்களிடம் கொடுத்தேன் அதை அவர்கள் வாங்க மறுத்தனர் எவ்வளவு முயன்றும் பலிக்கவில்லை.அவர்களுக்கு நன்றி சொல்லி விட்டு பஸ் ஏறினேன்.அவர்களிடம் பெற்ற பணத்தை மீண்டும் தருவதாக வாக்காளித்தேன் (சாத்தியபாடத ஒன்றை உணர்ச்சிவசப்பட்டு சொன்னேன்).இன்றும் நான் குடந்தை போனல் கூட அந்த முறுக்கு விற்க்கும் பையன் முகம் தேடி இப்படி இருப்பானோ அப்படி இருப்பனோ என்று நினைப்பதுண்டு.

இதற்க்கிடையில் சென்னையில் இருந்து திருவள்ளுவர் போக்குவரத்தில் வந்திரங்கிய (foreign return) நம்ம கதையை கேட்டு விட்டு அவர் பங்குக்கு பஸ் கட்டணத்தை அவரும் கொடுத்து விட்டார்.

ஆக ஒரு வழியாக ஊர் சென்று அடைந்தேன்.ஏனோ நடந்ததை வீட்டில் சொல்ல மனமில்லை மீதமிருந்த பணத்தையும் கொடுக்க மனமில்லாமல் பணம் தொலைந்து விட்டது என்றேன் அதற்காக வாங்கி கட்டி கொண்டது வேறு கதை.

கிடைத்த படிப்பினைகள்.

1) ஆசை இருக்கலாம் ஆனல்
பேராசையாக இருக்க கூடாது.அதனால் உண்மை சொல்ல முடியாத குற்ற உணர்வால் பணம் தொலைந்து விட்டது என்றது.

2) நான் செய்த தவறுக்கு முகம் தெரியாதவர்கள் பொறுப்பாகலாமா? நான்
யாசகனாக மாறிய கொடுமை.

3) அந்த சம்பவத்திற்கு பிறகு நான் சீட்டு விளையாடிதில்லை.ஆர்வமும் இல்லை.